Tamil Sanjikai

ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அறிவித்தார். அதாவது, ஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்க வேண்டும் என்ற நிபந்தனையை புறக்கணிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் இனி ஈரான் ஈடுபடும்.

அத்துடன் அமெரிக்காவை தவிர்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் மற்ற 5 நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை 60 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் ஒப்பந்தத்தின் மேலும் சில நிபந்தனைகளை ஈரான் மீறும் என்றும் ஹசன் ருஹானி எச்சரித்தார்.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததோடு , ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கையுடன் நில்லாது யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் என்ற அணுசக்தி விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் கடற்பகுதிக்கு டொனால்டு டிரம்ப் அனுப்பியுள்ளார். ஈரானை சுற்றி போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கு காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment