Tamil Sanjikai

பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடும்படி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி கடந்த 6ம் தேதி ஐ.நா. மன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் இந்திய அரசு மேற்கொணட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கடிதத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் நிராகரித்துவிட்டார். பாகிஸ்தானின் கடிதத்தை ஏற்க முடியாது என்றும் அதன் எந்தவித கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு

இதே போன்று காஷ்மீர் விவகாரம் தொடர்பான பாகிஸ்தானின் கோரிக்கையை அமெரிக்காவும் சீனாவும் நிராகரித்துவிட்டன. அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் காஷ்மீர் பிரச்னையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இதில் அமெரிக்கா தலையிடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இதே போன்று பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவும் இந்தியாவும் பாகிஸ்தானும் சமமான அளவு நட்பு கொண்ட அண்டை நாடுகள் என்று தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்னையை இரு நாடுகளும் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறு குரோஷிக்கு சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரஷியாவும் இந்தியாவுக்கு ஆதரவு

அதே போன்று ரஷியாவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் பிரச்சனையை முன் வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஜம்மு - காஷ்மீர் பிரச்சனைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச நாடுகள் நிராகரித்துள்ளது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது

0 Comments

Write A Comment