Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதில் சம்பந்தம் இல்லாமல் யாரும் தலையிட வேண்டாம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளது.

இந்த சூழலில், பாகிஸ்தான் சென்றுள்ள சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் துணைத் தலைவர் சூ கிலியாங் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பாகிஸ்தான் ராணுவ தலைவர் காமர் ஜாவித் பாஜ்வா உடன் தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது. காஷ்மீர் விவகாரத்தை புரிந்துகொண்டதற்காகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் சீனாவுக்கு பாஜ்வா நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் திறனை மேம்படுத்துவது ஆகியவை குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

0 Comments

Write A Comment