Tamil Sanjikai

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்று உள்ளார். இதன் மூலம் ஜனநாயக கட்சி எம்.பி. ஆன பிரமிளா ஜெயபால், அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகள் சபையின் தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண் என்கிற பெருமையை பெற்றுள்ளார். சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், 1982-ம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் குடியேறினார்.

வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பிரமிளா ஜெயபால், இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து, பட்டம் பெற்றார். அதன் பின்னர் சிவில் உரிமை ஆர்வலராக விளங்கி வந்த பிரமிளா ஜெயபால், குடியுரிமை ஆலோசனை மையம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சேவைகளை செய்துவந்தார்.

அதன் பின்னர் அரசியலில் களம் இறங்கிய இவர், 2015-ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் இருந்து போட்டியிட்டு பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆனார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. ஜனநாயக கட்சியினரிடம் செல்வாக்கு படைத்த பிரமிளா ஜெயபால், தற்போது பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவர் ஆகி இருக்கிறார்.

இது குறித்து பிரமிளா ஜெயபால் தனது டுவிட்டர் பக்கத்தில் “அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த பதவியை ஏற்கும் முதல் தெற்கு ஆசிய பெண்ணாக நான் பெருமைப்படுகிறேன். நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் மதிப்புக்குரிய இந்த பொறுப்பை ஏற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment