Tamil Sanjikai

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது .

ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் கதை முடிந்து விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது டுவிட்டரில், 'ஈரான் எங்களுடன் சண்டையிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது' என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க போர்க்கப்பல்கள், அரபிக்கடலில் கூட்டு பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை அந்நாட்டின் கடற்படை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்க அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் விமானம் தாங்கிக் கப்பல், போர் விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் அவ்வப்போது கூட்டு பயிற்சிகளையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. அந்த வகையில் கடற்படையின் பல்வேறு படையணிகள் அரபிக்கடலில், 2 நாட்கள் கூட்டு பயிற்சி நடத்திய நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

0 Comments

Write A Comment