Tamil Sanjikai

வெளிநாட்டுக்காரர்கள் சவூதி அரேபியாவின் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அந்நாட்டின் அரசு தொடங்கி இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதிஅரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மட்டும் வசிக்க வேண்டும் என்றால் 19 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் தவிர்த்து வேறு முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் இந்த திட்டத்தை சவுதி அரேபியா அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த மாதம் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஞாயிற்றுகிழமை தொடங்கி இருக்கிறது.

சவுதி அரபியாவில் பல ஆண்டுகளாக குடியுரிமை பெறாமல் வசிப்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் தொழில் செய்ய முயற்சிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment