Tamil Sanjikai

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டில் விவசாயத்துக்காக பசுமைக்குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கலப்பின முறையில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு வளர்க்கப்படும் ‘ஆக்டோபஸ் தக்காளி’ காய்த்து குலுங்குவதை பார்த்தால், தக்காளி செடியில் காய்க்கிறதா? அல்லது மரத்தில் விளைகிறதா? என்ற சந்தேகம் வந்து விடும். ஏனெனில் கலப்பின முறையில் விளைவிக்கப்பட்டிருக்கும் இந்த தக்காளி மரம், 50 முதல் 60 சதுர மீட்டர் களுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஆக்டோபஸ் கைகள் போல படர்ந்திருக்கிறது. அதனால்தான் இந்த பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

சீனர்களின் சாதனையால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்டோபஸ் தக்காளி மரம் வளர்வதற்கு ஒன்றரை ஆண்டு ஆகி இருக்கிறது. முதல் 8 மாதங்கள் வரை இந்த மரம் காய்ப்பதில்லை. அதற்குப் பிறகு பூத்து, காய்க்க ஆரம்பித்தால் 14 ஆயிரம் தக்காளிகள் வரை அறுவடை செய்யலாம். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இரண்டு தக்காளி மரங்களில் இருந்து 32 ஆயிரம் தக்காளிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை 522 கிலோ.

இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. ரிசார்ட் சார்பில் பார்வையாளர்கள் ஒரு மணி நேரம் இந்த பசுமைக்குடிலைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அசாதாரணமான செடிகள், காய்கள், பழங்கள் போன்றவற்றையும் இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு செடியும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு விளைகிறது, எப்படி பராமரிக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களையும் சுவாரசியமாக விளக்குகிறார்கள்.

தக்காளி, மரத்தில் காய்ப்பதே ஆச்சரியம், அதிலும் ஆயிரக்கணக்கில் காய்த்துத் தொங்குவதைப் பார்ப்பதற்கென்றே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் வருகின்றனர்.

0 Comments

Write A Comment