Tamil Sanjikai

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையாலும் வாகன நெரிசலைக் குறைக்கவும் ,மக்கள் அனைவருக்கும் பஸ், ரயில், ட்ராம் என அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளும் முற்றிலும் இலவசம் என லம்ஸம்பெர்க் நாடு அறிவித்துள்ளது. உலகின் முதல் நாடாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுப் போக்குவரத்து இலவசம் என லக்ஸம்பெர்க் அறிவித்துள்ளது.

பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளுடன் எல்லையைப் பகிரும் நாடான லக்ஸம்பெர்க் நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 லட்சம். இந்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் பஸ், ரயில், ட்ராம்கள் என அனைத்துப் பொது போக்குவரத்தின் கட்டணங்களும் முழுமையாக நீக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் கூட அதிகக் கட்டணம் இருந்தது கிடையாது. எந்த ஒரு பொது போக்குவரத்து வாகனமானலும் இரண்டு மணி நேர பயணத்துக்கு 2 யூரோக்கள் மேல் செலவாகாதாம். அதே போல் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தாலும் 4 யூரோக்கள் மேல் செலவாகாது எனக் சொல்லப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு யூரோ என்பது 80.43 ரூபாயாக உள்ளது. அடிப்படைக் கட்டணம் கூட இருக்கக் கூடாது என இலவசப் பயணங்களை அறிவித்துள்ளது லக்ஸம்பெர்க். இதன் மூலம் மக்கள் தனியாக வாகனங்களைப் பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்து நோக்கி வருவர் என்றும் இதனால் நாட்டின் முக்கியப் பிரச்சனையான போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நாட்டின் மக்கள் தொகை 6 லட்சம் தான் என்றாலும் இந்த சிறிய நாட்டிலிருந்து அண்டை நாடுகளுக்கு ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணி நிமித்தமாகப் பயணிக்கின்றனராம். இதனால் இந்த இலவசத் திட்டம் நிச்சயமாக மக்களுக்கும் அரசுக்கும் பயனளிக்கும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.

0 Comments

Write A Comment