Tamil Sanjikai

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசு ஆதரவுப் படைகள் மீது புரட்சி படை நிகழ்த்திய ஏவுகணை மற்றும் தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் பலியானார்கள்.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில், சவூதி தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசிற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனாலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி புரட்சி படைகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக ஏமன் அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு நாடுகளிலொன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் படைகள் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படைகள் அந்நாட்டின் முக்கிய நகரமான ஏடனில் முகாம் அமைத்து தங்கியுள்ளன.

இந்நிலையில், ஏமனில் அரசு ஆதரவுப் படைகள் மீது புரட்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணை மற்றும் தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் பலியாகி உள்ளார்..

ஏடனுக்கு அருகில் உள்ள பிரெய்க்கா நகரில் நடைபெற்ற அரசு ஆதரவுப் படைகளின் அணிவகுப்பு மீது ஹவுதி புரட்சிப்படைகள் பேலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தின. இதில் பல கமாண்டர்கள் பலியானதாக ஹவுதி ஆதரவு இணையதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக அங்கிருந்த காவல் நிலையத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பட்ட ஒரு கார், பேருந்து மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள் மோதின. இவ்விரு சம்பவங்களில் 40 பேர் பலியாகியுள்ளதாகவும், 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment