Tamil Sanjikai

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்நாட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாரீசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும், பிரான்சின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்து வரும் இந்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி நேற்று மாலையில் அந்த தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் தேவாலயத்தின் மீது வேயப்பட்டுள்ள 100 மீட்டர் நீளமுள்ள மேற்கூரையில் தீப்பிடித்தது. பின்னர் அருகில் இருந்த கோபுரத்திழும் தீ பற்றிக்கொண்டது.

மரச் சாமான்கள் மற்றும் ஈயத்தால் செய்யப்பட்டது என்பதால் தீ மளமளவென பரவி அந்தக் கோபுரம் எரிந்து
சரிந்தது.

உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தங்கள் நாட்டின் வரலாற்றுச் சின்னத்தைக் காக்க தீவிரமாகப் போராடினர்.

தீயணைப்பு வீரர்களின் முயற்சி காரணமாக தேவாலயத்தின் முக்கிய பகுதிகள் காப்பாற்றப்பட்டன. தேவாலயத்தை குளிர்விக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தீயால், உள்கட்டமைப்பு பலம் குறைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நோட்ரே டேம் தேவாலய தீவிபத்தால் பிரான்ஸ் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, வாடிகன் , அமெரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் ஆறுதல்களை பிரான்ஸ் மக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளன.

இந்த விபத்து குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். நோட்ரே டேம் தேவாலயம் மீண்டும் கட்டமைக்கப்படும் என்றும் இதற்காக உலகம் முழுவதும் நிதி திரட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நோட்ரே டேம் தேவாலயத்தை மீண்டும் கட்டமைப்பதற்காக 750 கோடி ரூபாய் கொடுக்க கோடீசுவரரான பிரான்காய்ஸ் ஹென்ரி பினால்ட் ((Francois-Henri Pinault)) முன் வந்துள்ளார்.

இதனிடையே இந்த விபத்தை, செப்டம்பர் 11, 2001ஆம் ஆண்டில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலோடு ஒப்பிட்டு அது தொடர்பான வீடியோக்களை யூடியூப் தடை செய்தது. ஆனால் பிறகு மென்பொருளில் ஏற்பட்ட தவறே இதற்கு காரணம் என விளக்கம் அளித்து அந்த வீடியோக்கள் மீண்டும் வழங்கப்பட்டன.

0 Comments

Write A Comment