Tamil Sanjikai

வெப்பமயமாதல். பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவில் கன மழை பெய்து வருகிறது. கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கிய கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு 1,900 கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

அந்நாட்டில் உள்ள் 15 மாகாணங்களில் 2,199 சாலைகள், 84 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 141 ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரைகள் உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்து கிராமங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 400க்கும் அதிகமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் 12 ஆயிரம் கி.மீ தொலைவு சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் நாட்டின் 35 சதவீத தொலை தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 86 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளதாக ஈரான் ஊரக மந்திரி அப்துல்ரேஸா ரெஹ்மானி ஃபாஸ்லி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் இடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் ஆண்கள் மற்றும் இளைஞர்களிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநரான கோலாமிராஸா ஷரியாத்தி தெரிவித்தார்.

கடந்த 19 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் இதுவரை 791 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment