Tamil Sanjikai

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லுவாலாபா மாகாணத்தில் தலைநகர் கோல்வெசியில் தாமிரம் மற்றும் கோபால்ட் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஓன்று செயல்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுரங்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் தாமிரம் மற்றும் கோபால்ட் தாதுக்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த சுரங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி 43 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் உடல் நசுங்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த விபத்து குறித்து, லுவாலாபா மாகாண கவர்னர் ரிச்சர்ட் முயேஜ் கூறுகையில், ‘‘200-க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்க தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தி அராஜக சுரண்டலில் ஈடுபட்டபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது’’ என்றார்.

காங்கோ நாட்டில் முறையாக உரிமம் பெறாமல் எண்ணற்ற சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன. அந்த சுரங்கங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப்பிடிக்கப்படாததால் அடிக்கடி இதுபோன்ற கோரவிபத்துகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment