Tamil Sanjikai

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரக்ஸிட் எனப்படும் வெளியேறும் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வந்தது.

ஆனால், கூட்டமைப்பில் பிரிட்டன் தொடர வேண்டும் என ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பிரக்ஸிட் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அவ்வாறு செய்தால், 2016ஆம் ஆண்டு எடுத்த முடிவு கேலிக்கூத்தாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய யூனியனிலில் உள்ள 27 நாடுகளுடனான உறவு குறித்த உடன்படிக்கையை தெரசா மே தயாரித்திருந்தார். இதற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒப்புதல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, 27 நாடுகளின் தலைவர்களை, பிரசல்ஸ் நகரில் தெரசா மே சந்தித்தார். அப்போது, தெரசா மேயின் உடன்படிக்கைக்கு 27 நாடுகளும் ஒப்புதல் அளித்தன. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் இதை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால், இது கொண்டாட வேண்டிய தருணம் இல்லை என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment