Tamil Sanjikai

உலகிலேயே பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவி செய்ய தயாராக இருப்பதாக ஜி7 அமைப்பின் உறுப்பு நாடுகள் தெரிவித்திருந்தனர். ஆனால் பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரோ அந்த உதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

தற்போது அமேசானில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து பிரேசில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த 29ஆம் தேதி மட்டுமே அமேசானில் ஆயிரத்து 255 காட்டுத்தீ பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 17ஆம் தேதி முதல் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச காட்டுத்தீ எண்ணிக்கை இதுதான் என்றும், பிரேசில் விண்வெளி ஆராய்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் உதவியை பிரேசில் நாடி உள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரேசில் அதிபரின் மகன் எடுவார்டோ போல்சோனரோ மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னெஸ்டோ அரவ்ஜோ ஆகியோர் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய எடுவார்டோ போல்சோனரோ தான் பிரேசில் சென்றதும் தனது தந்தையுடன் ஆலோசனை நடத்திய பின், டிரம்ப் உடன் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்தும், எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார். இந்த சந்திப்பின் போது, காட்டுத்தீ மற்றுமின்றி வர்த்தகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment