Tamil Sanjikai

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலீபான் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அரசுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பினரும் பொதுமக்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காபூல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் 1,200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதன் ஒரு பகுதியாக மேடையில் இசை கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்து கொண்டிருந்தனர். திடீரென மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.

இதில் இளைஞர்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். எனினும், அதிகாரப்பூர்வ தகவலை அதிகாரிகள் இன்று நண்பகலுக்கு மேல் வெளியிடலாம் என கூறப்பட்டது. இதனிடையே பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 63 பேர் பலியாகி உள்ளனர் என பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 180 பேர் காயமடைந்து உள்ளனர். தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என தலீபான் அமைப்பு மறுத்துள்ளது. வேறு எந்த குழுவினரும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.

இந்த வருடத்தின் மிக கொடூர தாக்குதலாக இது இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 7ந்தேதி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 145 பேர் காயமடைந்தனர். இதற்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

0 Comments

Write A Comment