Tamil Sanjikai

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த எப்-16 ரக விமானத்தை இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் மிக்-21 ரக விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தார்.

இந்த நடவடிக்கையின் போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பாராசூட் மூலம் இறங்கிய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர்.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் படையின் பிடியில் ரத்தக் காயங்களுடன் அபிநந்தன் காணப்பட்ட வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. இதில் ஜெனீவா உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறியுள்ளதாக கூறி, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

அபிநந்தனை விடுவிக்க இந்தியா தூதரக ரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் செய்தது. பின்னர் மார்ச் 1 ஆம் தேதி அட்டாரி-வாகா எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டர்.

பாகிஸ்தான் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் கையில் டீ கோப்பையுடன் பாகிஸ்தான் வீரர்களிடம், “டீ அருமையாக உள்ளது, நன்றி” என்று அபிநந்தன் கூறுவது போன்ற காட்சிகள் இருந்தன.

இந்த சம்பவத்தை குறித்து கேலி செய்யும் விதமாக கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்வர் லோதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அபிநந்தனின் கையில் ஒரு அருமையான டீயை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. தற்போது இந்த கீழான செயல் மூலம் பாகிஸ்தான் அரசு இந்தியா மீதான காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment