Tamil Sanjikai

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒதுக்குபுறமான பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது சிறுமி ஒருவரின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே சிறுவர்கள் ஓடிச்சென்று அங்குள்ள சிறிய குன்றின் பின்னால் சென்று பார்த்துள்ளனர். அப்போது,அங்கு வாலிபர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார். உடனடியாக சிறுவர்கள் கிரிக்கெட் மட்டையால் அந்த காமுகனை தாக்கி போலீஸ் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்து உள்ளனர்.

இந்த தீரசெயலில் ஈடுபட்ட ஜவஹர் நகர் கச்சி பஸ்தி குடியிருப்பாளர்களான மனீஷ் (15), அமித் (18), ரோஹித் (18) மற்றும் படேல் (14) ஆகியோருக்கு கூடுதல் போலீஸ் இயக்குநர் பி.கே.சோனி நினைவுபரிசு மற்றும் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.

இந்த இளைஞர்களின் தைரியத்தை பாராட்டிய திரு சோனி, இந்த அணுகுமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார். அவர்கள் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற பாத்திரத்தை வகித்தனர். மேலும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்று சோனி கூறினார்.

ஏற்கனவே 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள 13 காவல் நிலையப் பகுதிகளான ராம்குஞ்ச், கால்டா கேட், மனக்சக், சுபாஷ் சக், பிரம்மபுரி, நஹர்கர், கோட்வாலி, சஞ்சய் வட்டம், சாஸ்திரி நகர், பட்டா பாஸ்தி, லால் கோதி, ஆதர்ஷ் நகர் மற்றும் சதர் நிலைய பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

0 Comments

Write A Comment