Tamil Sanjikai

மருத்துவர்களின் அலட்சியத்தால், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, ரத்த குறைபாடு இருந்ததால்,சிவகாசி ரத்த வங்கியில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டு ,சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பரிசோதனை செய்தபோது, அந்த பெண்ணுக்கு HIV-யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்டது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட சுகாதாரத் துறை உத்தரவின் பேரில், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய பிறகே, தனது மருமகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் தங்களை கையெழுத்து போட சொல்லி வற்புறுத்தியதாகவும் கர்ப்பிணியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே HIV ரத்தம் ஏற்றப்பட்ட விவாகாரத்தில், ஆய்வக நிபுணர் உள்ளிட்ட 3 பேரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment