Tamil Sanjikai

நமது உணவு பழக்க வழக்கம் மாறுவது காரணமாக அன்றாடம் மனிதன் பல்வேறு நோயால் பாதிக்கப் படுகிறான். மேலும் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு காரணமாகவும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களாலும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக நீரழிவு நோயாலும், இதய நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

உலக சுகாதார மையம் கணக்கெடுப்புபடி 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 7 கோடி பேர் நீரழிவு நோயுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மட்டும் மல்லாது சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நீரழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2030-ஆம் ஆண்டில் 9.8 கோடி பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை 63.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாததால் நீரழிவு ஏற்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். நீரழிவு 3 வகைப்படும். இதில் முதலாவது வகை குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் இளம் பருவத்தினருக்கு ஏற்படுகிறது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்து இருக்கும்.இதில் 2-வது வகை நீரழிவு என்பது போதிய அளவு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுகிறது. 3-வது வகை நீரழிவு கர்ப்ப காலத்தில் ஏற்படுவதாகும். இது குழந்தை பிறந்த பின்பு மறைந்து விடும். என்றாலும் பிற்காலத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் நீரழிவு உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதில் முதலாவது வகையும், 3-வது வகையும் குறைவு. 2-வது வகையான நீரழிவுதான் அதிகம் பேரை பாதிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வகை 90 சதவீத நோயாளிகளிடம் காணப்படுகிறது. உடல் பருமன் உள்ளவர்களிடமும் வயதானவர்களிடமும் காணப்படும். உடல் எடையை குறைப்பதாலும், உணவு கட்டப்பாடு மற்றும் உடற்பயிற்சியினால் இதை கட்டுப்படுத்தலாம். இந்த ஆண்டு கணக்கெடுப்பு படி உலகம் முழுவதும் 51 .1 கோடி பேரை பாதித்த நீரழிவு 2030-ம் ஆண்டில் 63.4 ஆக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment