Tamil Sanjikai

தென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாகப் பிறந்தவர் மார்ஷல் ஏ. நேசமணி. இவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் 1895-இல் ஜூன் 12-ஆம் தேதி அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். இதனால் இவருக்கு நாயர்களின் அடக்கு முறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்தது. இவர் முதலில் திருநெல்வேலி ஸ்காட் கிருத்துவ உயர் நிலைப் பள்ளியில் படித்துவிட்டுப் பின்னர் திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஒரு வருடம் கர்னூல் பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார், பின்னர் திருவனந்தபுரம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் இவர் தலைமை ஆசிரியரானார். அதே நேரத்தில் இவர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில், 1921 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கிரிமினல் துறை வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார்.

நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும்(Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தார். அதே போன்று நாகர்கோவில் பார் அசோசியேஷன்(Bar Association)-ல், மேல் சாதி வழக்கறிஞர்களுக்கும் கீழ் சாதி வழக்கறிஞர்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக் கொண்டார். நாகர்கோயில் பார் அசோசியேஷனுக்கு இவர் தலைமைப் பொறுப்புக்கு 1943-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1943 முதல் 1947 வரை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தார்.

டிசம்பர் மாதம் 1944-இல் இவர் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1945 முதல் 1947 வரை திருவாங்கூர் சட்டமன்றமான திருமூலம் சபையில் உறுப்பினர் ஆனார். திருவாங்கூர் பல்கலைக் கழக நியமன உறுப்பினராகவும் ஆனார். 1947 அக்டோபரில் இவரது திருவாங்கூர் காங்கிரஸ்-ஐ ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அமைத்தார். 1948 முதல் 1952 வரை உள்ள கால கட்டத்தில் திருவாங்கூர் கொச்சி சட்டசபையில் திருவாங்கூர் காங்கிரஸ்-இல் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்தார். 1955 முதல் 1956 வரை இவர் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 1951, 1962, 1967 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் இவர் நாகர்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். அப்போதெல்லாம் இவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு இவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார். அரசியலில் இவரது முக்கிய பங்கு கன்னியாகுமரி பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப் போராடியதுதான். இந்தியா சுதந்திரம் பெற்ற போது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமஸ்தானங்களில் ஒன்று. மிகப் பழமையானதும், சில தனித்துவ குணங்கள் அமைந்ததுமாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குமரி மாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. திருவாங்கூர் ராஜ வம்சத்தின் ஆட்சியில் மக்களில் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு நல்ல வசதியும், வாழ்க்கையும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. கீழ் மட்டத்திலிருந்தவர்கள் உரிமைகள் பல பறிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற சமூக அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள்.

கேரளத்தில் நாயர் சேவை இயக்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற சூழ் நிலையில்தான் தோன்றின. இந்த சமுதாய விடுதலை இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் உருவாயிற்று. இந்த போராட்டத்தை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் மார்ஷல் ஏ. நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது. இந்த அமைப்பின் முதல் முக்கிய நோக்கமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சமுதாய அடக்குமுறைகளை எதிர்த்துத்தான் இருந்தது. இதே அமைப்பு பின்னர் அரசியல் இயக்கமாகவும் மாறி உருவெடுத்தது. இந்த அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்தது. இவர்களுடைய நீண்ட போராட்டத்துக்கு பின், 1956 நவம்பர் 1-இல் மொழிவழி மாகாண பிரிவினையின் போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த இணைப்பிலும், சமுதாய நலன் காக்கும் போராட்டத்திலும் மார்ஷல் ஏ.நேசமணியும், பி.தாணுலிங்க நாடாரும் முன்னிலை வகித்து நடத்தினர். அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டமாக மாறியது.

சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன். நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு”. இந்த சாதனைகளின் காரணமாக பி. எஸ். மணி நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார். திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார். இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இந்த இணைப்புக்குப் பின் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது. செயற்கரிய சாதனைகளைப் புரிந்த மார்ஷல் ஏ.நேசமணி 1968 ஜூன் 1-ஆம் தேதி காலமானார். இவர் இறக்கும் வரை இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் இறப்பையொட்டி 1969-இல் நடந்த இடைத்தேர்தலில் தான், அதற்கு முன்பு 1967-இல் தன் சொந்த தொகுதியான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜ் இங்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய முயற்சியால் மாத்தாண்டத்தில் நேசமணி நினைவு கிருஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது. இப்புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழோடு மறைந்த மார்ஷல் ஏ.நேசமணி அவர்களின் புகழ் வாழ்க!

0 Comments

Write A Comment