Tamil Sanjikai

வங்கக் கடலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் அதிகாலை 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு - வட கிழக்கில் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழிப்பேரலை தொடர்பாக எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நில நடுக்கம் காரணமாக சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வை உணர்ந்த மக்கள், இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை, தரமணியில் உள்ள டைடல் பூங்கா பகுதியில் நில அதிர்வு நன்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறக்கத்தின் போது நில அதிர்வை உணர்ந்ததாகவும், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் அச்சத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

நில அதிர்வு குறித்து தகவல் அறிந்ததும், சென்னையில் வசிக்கும் தங்கள் உற்றார், உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலரும் விசாரித்து வருகின்றனர்.

புவியியல் ரீதியாக தமிழகம் பாதுகாப்பாகவே இருப்பதால் பெரிய அளவிலான நில நடுக்க பாதிப்புகள் தமிழகத்திற்கு இருக்காது என அண்ணா பல்கலை புவியியல் பேராசிரியர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்துக் கூறிய அவர், பூமிக்கு அடியில் உள்ள தட்டுக்கள் மேலும் கீழுமாக நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த தட்டுக்கள் தற்போது வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு அதிர்வுகள் ஏற்படும் எனவும் இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment