Tamil Sanjikai

குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் எண்களுக்கு வரும் அழைப்புகளை துண்டிக்க கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான நாள் முதல், அதிரடி சலுகை மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. முதலிடத்தில் இருந்த ஏர்டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனம் சரிவை சந்தித்தன. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் வசதி இருப்பதால், பெரும்பாலும் ஜியோவை முதல் தேர்வாக இருக்கிறது. ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்றவை இரண்டாம் சிம் கார்டாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பழையை அழைப்புகளை தொடர்ந்து பெறுவதற்காக அதே எண்களை வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். கடும் சரிவைச் சந்தித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளனர். போதிய வைப்புத்தொகை இருந்தாலும் மாதம் குறைந்தபட்ச தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் எண்களுக்கான சேவை ரத்து செய்யப்படும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிரட்டி வந்தன.

குறைந்தபட்சம் ரூபாய் 35 கூட ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் பல மில்லியன் வாடிக்கையாளர்களின் எண்களின் சேவையை ரத்து செய்யப்போவதாக சில நிறுவனங்கள் அறிவித்தன. கடும் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் இதுகுறித்து டிராய் அமைப்புக்கு புகார் தெரிவித்தனர். ஏராளமான புகார்கள் வந்த நிலையில், மாதம் குறைந்தப்பட்ச ரீசார்ஜ் செய்யாத காரணத்துக்காக எண்களின் அழைப்பை துண்டிக்கக் கூடாது என்றும், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சேவை காலாவதி ஆகும் தேதி குறித்த விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் டிராய் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், காலவதி ஆகும் தேதிக்கு முன்பே இணைப்பை துண்டிக்கக் கூடாது என்றும் டிராய் தெரிவித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 Comments

Write A Comment