Tamil Sanjikai

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது. புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் மூலம் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இதனுடன், வெளிநாடுகளுக்கான 30 சிறு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன.

பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும். இந்தியாவின் மேலாண்மை வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக 380 கிலோ எடைகொண்ட ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

0 Comments

Write A Comment