Tamil Sanjikai

உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது.

நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பதுடன் , பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 'பேரேஷீட்' (Beresheet) என்னும் விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்க திட்டமிட்ட இடத்திலேயே விண்கலம் விழுந்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. பேரேஷீட் விண்கலம் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.

இஸ்ரேல் அதன் முதல் முயற்சியில் தோல்வியை சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்வோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ தெரிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் நிலவில் விண்கலத்தை இறக்குவோம் என்று உறுதிபட தெரிவித்தார். சந்திராயன் 2- விண்கலத்தை விரைவில் இந்தியா நிலவுக்கு அனுப்ப உள்ள நிலையில், நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கிய நாடுகளின் பட்டியலில் 4-வது இடம் கிடைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு நீடிக்கிறது.

0 Comments

Write A Comment