Tamil Sanjikai

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும். சந்திராயன் 2 விண்கலம் சந்திரனின் தென் துருவப் பகுதிக்குச் செல்லும், இதற்கு முன்னர் எந்த நாடும் அந்த பகுதிக்கு சென்றதில்லை. 15-ம் தேதி அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோபோ ரோவர் ஏவப்படுகிறது.

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இஸ்ரோவின் இந்த விண்கலத்தை விண்ணில் , ஏவப்படும் போது நேரில் பார்வையிட வருமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரோ தலைவர் சிவன் அழைப்பு விடுத்தார்.

ராம்நாத் கோவிந்த் வருகை தந்தால், ராக்கெட் ஏவுதலைக் காணும் 3-வது ஜனாதிபதி ஆவார். ஏற்கனவே, ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் 2005-ம் ஆண்டு கார்டோசாட் 1 செயற்கைக் கோள் ஏவுதலையும், 2013-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜியும் செயற்கைக் கோள் ஏவுதலை நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment