Tamil Sanjikai

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்தது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் மார்ச் 2019-ம் ஆண்டு சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் சீரிஸ் பிப்ரவரி 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019-ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியிடப்படலாம் என சாம்சங் நிறுவன தலைவர் கோ டாங் ஜின் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

மேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறைந்தபட்சம் பத்து லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. கேலக்ஸி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1,770 டாலர்கள் ரூபாய். 1,28,935 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இது குறைந்த எண்ணிக்கையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் உள்புற டிஸ்ப்ளே மற்றும் வெளிப்புறம் 4.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய மடிக்கக்கூடிய சாதனம் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை. புதிய சாதனத்தின் உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் தொடங்க இருப்பதாக சாம்சங் தெரிவித்திருக்கிறது.

0 Comments

Write A Comment