Tamil Sanjikai

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டிருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவரது உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு,அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தம் வழங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ், கடந்த 27ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், அவர் திடீரென ரத்தவாந்தி எடுத்ததால் புதிய ரத்தம் ஏற்றப்பட்டது. எனினும், நேற்று சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் குடித்த விஷத்தின் வீரியம் காரணமாகவே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் இயல்பான நிலையில் உள்ளதாகவும், அவரது வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து மருந்துகள் வழங்கப்பட்டுவருவதாகவும் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

இதற்கிடையே, விஷ ஊசி போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதால் இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும், என குடும்பத்தினர் வலியுறுத்திவரும் நிலையில் , உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கு பிறகே, பிரேத பரிசோதனை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. .

இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 Comments

Write A Comment