Tamil Sanjikai

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் கவனக்குறைவால் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியாது. இந்நிலையில் HIV ரத்தம் தானம் செய்த அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIV ரத்தத்தை தானமாக கொடுத்த இளைஞர் நேற்று தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று அவர் அனுமதிக்கப்பட்டார். இளைஞரை மருத்துவர்கள் நச்சு முறிவுக்காக உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இதேபோல் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு அனைத்துத்துறை மருத்துவர்களும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதனிடையே சுகாதாரத்துறை அதிகாரிகளின் விசாரணைக்குப்பின், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் யார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார்களோ, அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment