Tamil Sanjikai

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தெற்கு நோக்கிச் சென்றால், கூடல்மாநகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வீடுகள் எதுவும் கட்டப்படாததால், வீட்டுமனைக்காக பிரிக்கப்பட்ட, பல ஏக்கர் நிலத்தில் காட்டுச்செடிகளும், மரங்களும் வளர்ந்து காடு போல் காணப்படுகிறது. நேற்று இந்த பகுதியில் புதர்களுக்குள் ஒரு இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக, அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து சம்பா இடத்திற்கு விரைந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார், இறந்து கிடந்த பெனின் உடலை பார்வையிட்டனர். பார்வையிட்ட போது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த பெண்ணின் முகத்தை தீயில் எரித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் பிணம் கிடந்த பகுதியிலிருந்து சிறிது தொலைவில் பெண்ணை கொலை செய்து, எரித்ததற்கான தடயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த கொலையானது 2 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் நிறைய தடயங்கள் கிடைத்திருப்பதால், திருப்பூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். டாக்டர் வேல்முருகன் தலைமையில் தடயவியல் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். அதன் பிறகு மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் தீயில் கருகிவிட்டதால், அந்த பெண் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இளம்பெண் வேலைக்குச் செல்லும்போது சில ஆசாமிகள் கூட்டாக சேர்ந்து அவரை கடத்தி இருக்கலாம். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கொலை செய்து, முகத்தை எரித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து நூற்பாலைகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் பெண் யாராவது காணாமல் போயயுள்ளனரா ? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

தாராபுரத்தில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கண்ணாங்கோவில் பகுதியில் செயல்படாமல் இருந்த ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தில், இதே போன்று ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்துவிட்டு முகத்தை மர்ம ஆசாமி எரித்து சென்ற சம்பவமும், ஒட்டன்சத்திரம் சாலையில் கோனேரிபட்டி பிரிவுக்கு அடுத்துள்ள கருப்பண்ணசாமி கோவில் அருகே இருந்த காட்டுப்பகுதியில், ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துவிட்டு, முகத்தில் பாறாங்கல்லை போட்டு முகத்தை அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்த சம்பவமும் நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இளம்பெண்ணை அதே முறையில் கொலை செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment