Tamil Sanjikai

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து சில ஆவணங்களை நகல் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என கூறினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

அறைக்குள் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன்பின் வாக்குப்பதிவு ஆவண அறையில் நுழைந்ததாக கலால் வட்டாட்சியர் சம்பூர்ணத்திடம், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அவர் 2 மணிநேரம் ஆவண அறையில் இருந்துள்ளார். ஆனால், வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்குள் நுழையவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

0 Comments

Write A Comment