கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், வந்த நிர்மலா தேவியிடம் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வந்தது. இதற்கு செய்தி சேகரிக்க பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அதே சமயம், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி தலைமையில் 5 ஆய்வாளர்கள், 12 சார்பு ஆய்வாளர்கள் 100 காவலர்கள் நிர்மலா தேவியின் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர்.
நிர்மலா தேவி விசாரணை முடிந்து வந்த போது, அவரிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க முயன்றனர். ஆனால் அவர்களை நிர்மலாதேவியிடம் நெருங்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கேமரா உடைக்கப்பட்டது. மேலும் 2 செய்தியாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நிர்மலா தேவியை காவல் வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர், அவசர அவசரமாக அங்கிருந்து அவரை அழைத்துச்சென்றனர்.
0 Comments