Tamil Sanjikai

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 11.1.2012 அன்று முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் காப்பீட்டுத் தொகை இன்று முதல் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரிவான மருத்துவகாப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 26 லட்சத்து 96 ஆயிரம் பேர், 5 ஆயிரத்து 133 கோடி ரூபாய் அளவு பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கைகள் வந்ததாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைப் பரிசீலித்து 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளதாகவும், அதன்படி, இன்று முதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 58 லட்சம் குடும்பங்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment