Tamil Sanjikai

தமிழர்களின் மிக தொன்மையான விழாக்களில் திருக்கார்த்திகை தீபம் முக்கியமாகும். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் இப்போது காணாமல் போய்விட்டன. ஆனால் திருக்கார்த்திகை தீபம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை திருக்கார்த்திகையின் சிறப்பு தான். அதிலும் தென்தமிழகத்தின் பனை ஓலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்திப்பெற்றது.

கார்த்திகை தீபத்திருநாளின் சிறப்பு பண்டமாக பனையோலை கொழுக்கட்டை செய்யப்படுகிறது. பனை மரங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அதிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம் மற்றும் ஓலையைக் கொண்டு செய்யப்படும் இது பாரம்பரிய பண்டிகை பண்டம்.

பச்சரிசி மாவுடன், பாசிப்பயறு, வெல்லம் அல்லது கருப்பட்டி, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, இந்தக் கலவையைப் பனை ஓலையில் பொதிந்து, அவித்துச் செய்யப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு இணையேதும் இல்லை. கருப்பட்டியில் அரை கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், வடிகட்டிய கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் நீர் விட்டுப் பிசைந்து கொண்டு.

ஒருபனை ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, மற்றொரு ஓலையால் அழுத்தி, மூடிவிட்டு, ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைத்துக் கொண்டு, இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கும் போது பனை ஓலைக் கொழுக்கட்டையின் மணம் சுண்டி இழுக்கும்.

0 Comments

Write A Comment