Tamil Sanjikai

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலத்துடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை திருமகள் துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சுடர்விடும் தீபங்களின் ஒளிபோல மக்கள் மனமெல்லாம் இனிமை பொங்கும் திருநாளாகவும், உள்ளத்திலுள்ள இருள் விலகி புத்தொளி பிறக்கும் நன்னாளாகவும் தீபாவளி விளங்குகிறது.

தீப ஒளித் திருநாளில், மக்கள் அதிகாலை எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடைகளை அணிந்து, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, இறைவனை வணங்கி, இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். இத்தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment