Tamil Sanjikai

சென்னை கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக பயணிகளுக்கு மாதாந்திர பயண அட்டை (சீசன் டிக்கெட்) வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று மற்ற ரெயில்களில் இருந்து வருபவர்களுக்கும் ரெயில்வே மாதாந்திர அட்டை வழங்கப்படுகிறது. ரெயில்வே விதிகளின்படி சீசன் டிக்கெட்டில் 150 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும்.

ஆனால் தற்போது இதை 10 கிலோ மீட்டர் தூரம் அதிகரித்து 160 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள இடங்களுக்கு ரெயில்வே சீசன் டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதனால் அரக்கோணம், திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு பயண தூரம் நீட்டிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.

அந்த அடிப்படையில் சென்னை-அரக்கோணம் பிரிவில் சீசன் டிக்கெட் பயண தூரம் 10 கி.மீ. கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை சென்டிரலில் இருந்து காட்பாடி வழியாக மேலஆளத்தூர் வரையும், சென்னை எழும்பூரில் இருந்து சென்னை பூங்கா, சென்டிரல் வழியாக குடியாத்தம் வரையும் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை எழும்பூரில் இருந்து சென்னை பூங்கா, சென்னை கடற்கரை வழியாக குடியாத்தம் வரையும் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீசன் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ். செயலி மூலமாகவும் எடுத்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment