Tamil Sanjikai

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தொடர்ந்து நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 75 நீதிபதிகள் பணியிடம் உள்ளது. அவற்றில் ஏற்கெனவே 59 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார். தலைமை நீதிபதி தஹில் ரமணி அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

1990ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிந்த செந்தில்குமார் ராமமூர்த்தி, பல மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கறிஞராக இருந்துள்ளார். இவர் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழலில் மேலும் 15 நீதிபதிகளின் பணியிடங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ளன.

0 Comments

Write A Comment