Tamil Sanjikai

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், தங்கதமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி, குரு கிருஷ்ண குமார், வக்கீல்கள் கவுதம் குமார், பாலாஜி சீனிவாசன், சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மணிந்தர் சிங் ஆகியோர் தங்கள் வாதங்களை முடித்துள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதி ஏ.கே.சிக்ரி கடந்த மார்ச் 7-ந் தேதி பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது..

இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து விரைவில் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன்படி இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோரை கொண்ட புதிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைத்தனர். மேலும் நிலுவையில் உள்ள இந்த இரண்டு வழக்குகளும் ஒரே நாளில் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

0 Comments

Write A Comment