Tamil Sanjikai

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறி முதல் செய்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரபுகுமார் தலைமையில் அதிகாரிகள் சேலம் இரும்பாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி அதன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த மணி என்பது தெரியவந்தது.

பின்னர் சரக்கு ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.3 லட்சம் மதிப்பிலான 250 சேலைகள் இருந்தன. அதை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சாரதாருக்மணியிடம் ஒப்படைத்தனர்.

இதே போன்று கொண்டலாம்பட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் வந்தார். அவரிடம் சோதனை நடத்திய போது உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் நேற்று இரவு சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரங்கராஜன் தலைமையில் அதிகாரிகள் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

0 Comments

Write A Comment