சென்னையில் ரூட்டு தல என்ற பெயரில் அரசு பேருந்துகளில் அராஜகம் செய்து வந்த கல்லூரி மாணவர்கள் இனி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் கடந்த செவ்வாயன்று பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அரசு பேருந்தில் கத்தியால் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சென்னை முழுவதும் ரூட்டு தல என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் முன்பு நன்னடத்தை உறுதிமொழி ஏற்றனர்.
ரூட்டு தல என்ற பெயரில் அடாவடித்தனம் செய்துவந்த பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, புது கல்லூரியை சேர்ந்த 90 மாணவர்களிடம் குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தின் படி இனி எந்த தவறும் செய்யமாட்டோம் என்று போலீசார் பிரமாண பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். அதன்படி இனி குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி வழங்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாக மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.
0 Comments