Tamil Sanjikai

சமீப காலமாக தேனியில், வடமாநில கொள்ளையர்களால் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கிராமம் அம்மாபட்டி. அங்குள்ள என்.எஸ்.எஸ் சாலையில், இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் சுற்றிய வடமாநில கொள்ளையர்கள், மின்வாரியத்துறையில் பணியாற்றும் ராஜா என்பவரது வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளே குதித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் இருந்த விஜயா என்பவரது வீட்டின் பூட்டை உடைக்க முயற்சித்த போது, விஜயா கூச்சலிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து அடுத்த தெருவிற்குச் சென்ற கொள்ளையர்கள், ராமையா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். ஆட்கள் சத்தம் கேட்டதும், அங்கிருந்து ஓடிவிட்டனர். இச்சம்பவம், ராஜா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது..

நான்கு பேர் அரை நிர்வாணக் கோலத்தில், வீட்டை நோட்டம் விட, அதில் இருவர் வீட்டின் பூட்டை உடைக்க உள்ளே செல்கிறான். நள்ளிரவில் தொடரும் வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையால் அச்சத்தில் இருந்த தேனி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தெற்கு ஜெகநாதபுரத்தில் வசித்துவருகிறார் கோபாலகிருஷ்ணன். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், குடும்பத்தோடு நேற்று அதிகாலை திருப்பதிக்குச் சென்று இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த 280 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த கோபாலகிருஷ்ணன், பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

நள்ளிரவில், சிறிதளவும் அச்சமின்றி சுற்றித்திரியும் வடமாநிலக் கொள்ளையர்களால் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் ரோந்துப்பணியினை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

0 Comments

Write A Comment