Tamil Sanjikai

மதுரை மத்திய சிறையில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலையடுத்து, சுவர் மேல் ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர்.

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் போலீசார் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 2 கைதிகள் தங்கியிருந்த அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் ஆயுதங்கள் சிக்கின. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் போலீசாரை கீழே பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு கைதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறையில் இருந்த மற்ற கைதிகள் அந்த இரண்டு பேரையும் அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கைதிகள் அரை நிர்வணமாக சிறையில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர். மேலும், சுவரில் ஏறி கூச்சலிட்டதுடன், போலீசார் மீது கற்களை வீசி எறிந்தனர்.

இதையடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சிறைத்துறை அதிகாரிகளை தாக்கியது அப்பள ராஜா கும்பலைச் சேர்ந்த இரண்டு கைதிகள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் கைதிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது. அதன் பிறகே அப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரானது.

0 Comments

Write A Comment