Tamil Sanjikai

சென்னையில், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் தபால் வாக்குகளை அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட குறிப்பிட்ட பள்ளிகளில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரத்து 323 காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு இன்று வாக்களிக்கவுள்ளனர்.

தென்சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவு நந்தனம் கலைக்கல்லூரியில் காலை 7 மணிக்குப் பதில் 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான அதிகாரிகள் வராததால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மத்திய சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப்பதிவும் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கியது.

0 Comments

Write A Comment