Tamil Sanjikai

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த கனகராஜ், அவரது மகன் திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மற்றும் கார் வாங்கி விற்பனை செய்யும் வேலையும் செய்து வருகிறார். வட்டிக்கு கொடுக்கும் பணத்தை வசூலிக்கும் வேலையை பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் செய்து வந்தார்.

இந்த நிலையில் என்ஜினீயரிங் படித்த சபரிராஜன், ஜவுளிக்கடை வைத்து நடத்தி வரும் சதீஷ் ஆகியோருடன் திருநாவுக்கரசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டனர். இதற்காக மாணவிகளை காதலிப்பது போன்று நடித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்து வந்ததாக தெரிகிறது.

இதில் அழகான பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் செல்போன் எண்ணை எப்படியாவது வாங்கி கொடுப்பது திருநாவுக்கரசுவின் வேலை. சபரி ராஜன் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி பேசி அவர்களை மயக்கி தனது வலையில் விழச்செய்துள்ளார்.

இதற்காக சபரிராஜன் என்கிற தனது பெயரை ரிஸ்வந்த் என்று மாற்றி உள்ளார். மேலும் முகநூலில் தனது அழகான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். சபரிராஜனின் மயக்கும் பேச்சு மற்றும் அவரது அழகான புகைப்படத்தை பார்த்து பல பெண்கள் அவரின் காதல் வலையில் வீழ்ந்து இருக்கிறார்கள். அப்படி சிக்கும் பெண்களை ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு சபரிராஜன் அழைத்து செல்வார்.

அங்கு தனி அறையில் வைத்து பெண்ணிடம் சபரிராஜன் உல்லாசமாக இருப்பதை மறைந்து இருந்து அவரது நண்பர்கள் சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகியோர் செல்போனில் படம் பிடிப்பார்கள். பின்னர் அந்த படத்தை காட்டி மிரட்டி அந்த பெண்களை மற்ற 3 பேரும் சேர்ந்தோ அல்லது தனி, தனியாகவோ பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

மேலும் இதை வெளியில் கூறினாலோ, போலீசில் புகார் கொடுத்தாலோ எடுத்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மேலும் பெண்கள் அணிந்து செல்லும் நகை, பணத்தை பறித்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையில் சதீஷ் யாரையாவது பார்த்து ஆசைப்பட்டால் அந்த பெண்ணையும் சபரிராஜன் தனது வலையில் வீழ்த்தி நண்பர்களுக்கு விருந்தாக்கி உள்ளதாக தெரிகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக பெண்களை ஆபாச படம் எடுத்து வந்துள்ளனர்.

இதுவரைக்கும் 100க்கும் அதிகமான வீடியோக்கள் எடுத்துள்ளனர். அதில் தற்போது 30 வீடியோக்கள் வரை கிடைத்துள்ளது. யாரும் புகார் கொடுக்காததால் கடந்த 7 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல், தற்போது தான் 19 வயது மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் சிக்கியுள்ளனர் இந்த நால்வரும். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வரலாம். புகார் கொடுக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது .

0 Comments

Write A Comment