Tamil Sanjikai

மதுரை கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன். போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர் இறந்து விட்ட காரணத்தினால், வாரிசு அடிப்படையில் இவருடைய மனைவி வெங்கடேஸ்வரிக்கு வேலை வழங்கப்பட்டது. அவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளார்க்காக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் கோபால்சாமி(வயது 27). பட்டதாரி.

நேற்று இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவில் பின்பகுதியில் உள்ள இடத்தில் நண்பர்களுடன் கோபால்சாமி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல்கோபால்சாமி மற்றும் அவருடைய நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கோபால்சாமியை தாக்க முயற்சி செய்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச் சென்றது. பின்னர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்து உயிருக்கு போராடினார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கோபால்சாமியை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார் கொலை சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, “கொலை செய்யப்பட்ட கோபால்சாமி மீது சில வழக்குகள் உள்ளன. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு காதல் திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகராறில் கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரிக்கிறோம்.

இதுபோல், திருட்டு வாகனங்கள் தொடர்பாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. அது தொடர்பான விரோதத்தில் கொலை நடந்ததா? என்பது பற்றியும் விசாரிக்கிறோம். முழு விசாரணைக்கு பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். சந்தேகத்தின் பேரில் அவருடைய நண்பர்கள் சிலரை பிடித்தும் விசாரித்து வருகிறோம்“ என்றனர்.

நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments

Write A Comment