Tamil Sanjikai

திருச்சி அரியமங்கலம் அருகே காவலர் உடையில் இருந்த காவலரையே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிபவர் ஹரிஹரன் (40). இவர் நேற்று மாலை உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மீன்வியாபாரியான இஸ்மாயில் மெடிக்கலில் போதை மாத்திரை கேட்டு தகறாறு செய்வதாக அவருக்கு புகார் வந்தது. இதையடுத்து மருந்து கடைக்கு சென்ற ஹரிஹரன், தகராறில் ஈடுபட்டவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இஸ்மாயில் வீட்டில் இருந்த மீன் வெட்டும் அரிவாளை எடுத்து வந்து தலைமை காவலரின் தலை, முகம் மற்றும் கை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார். அருகில் இருந்தவர்கள் தடுப்பதற்காக ஓடிவருவதற்குள் இஸ்மாயில் தப்பியோடிவிட்டார்

இதையடுத்து படுகாயமடைந்த காவலர் ஹரிஹரன் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர்கள் நிஷா, மயில்வாகனன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.

இதனிடையே அரியமங்கலம் போலீசார் இஸ்மாயிலை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

0 Comments

Write A Comment