Tamil Sanjikai

சென்னை முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறை அதிகாரிகள் ஈடுப்பட்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு மசாஜ் சென்டர் நடத்த லஞ்சம் வாங்கி சிக்கிய உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார்.

சென்னை அசோக் நகர் 4 வது நிழற்சாலையில் அமைந்துள்ளது ரையான் ரெக்ரியேஷன் கிளப். அரசு விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட இந்த கிளப்பின் ஒரு பகுதியில் ரூபா என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அசோக் நகர் சரக உதவி ஆணையராக வின்சென்ட் ஜெயராஜ் பொறுப்பேற்ற பிறகு மசாஜ் சென்டர் நடத்த வேண்டுமென்றால் மாதா மாதம்50 ஆயிரம் மாமூல் கொடுக்க வேண்டும் என மசாஜ் சென்டர் உரிமையாளாரிடம் கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் கேட்ட மாமூல் கொடுக்காததால் கடந்த 8-ந் தேதி ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசாரை மசாஜ் கிளப்பிற்கு அனுப்பி, மசாஜ் சென்டரை மூடுமாறும், இல்லையென்றால் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜ் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

நடவடிக்கையை தவிர்க்க அவரை நேரில் சென்று பாருங்கள் என கூறியதால் கிளப் தலைவரான செந்தில்குமார் என்பவர் அசோக் நகர் உதவி ஆணையர் வின்செண்ட் ஜெயராஜை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது மாதம் 50 ஆயிரம் மாமூல் கொடு இல்லையென்றால் கடையை மூடு என உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கூறியதாகவும், அவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதற்கு வருமானம் இல்லை என கூறியதால், மசாஜ் சென்டரில் தொழில் செய்து கொடு எனஅவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கிளப் தலைவரான செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுக்க, அதிகாரிகளின் திட்டத்தின் படி ரசாயனம் தடவிய 50 ஆயிரம் பணத்தை செந்தில் குமார் அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 Comments

Write A Comment