Tamil Sanjikai

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த உணவகம் புறம்போக்கு இடத்தில் கட்டியிருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் முறையின்றி கட்டப்பட்ட அம்மா உணவகத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

அதன்பேரில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தை இடிப்பதற்காக, இன்று காலை நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு கூடிய அப்பகுதியினர் அம்மா உணவகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர்

பின்னர் அம்மா உணவகத்தின் முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூடி, கையில் தட்டை ஏந்தியபடி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அம்மா உணவகம் தற்போது வரை இடிக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த உணவகத்தை மையமாக கொண்டே தாங்கள் பசியாறி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment