Tamil Sanjikai

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களும், அக்டோபர் மாதம் தொடக்கத்திலும் பருவமழை பெய்யும். 6 மாதம் மழை கொட்டி தீர்த்தவுடன், அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் உறைப்பனி தொடங்கும். ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி, கடந்த மாதம் வரை பெய்ததால், உறைப்பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உறைப்பனி கொட்டி வருகிறது. இதனால், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி மரவியல் பூங்கா ஏரி கரையோரத்தில் உள்ளதால், பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், இங்குள்ள பூங்காவில் உள்ள அலங்கார செடிகள், மலர் செடிகள் ஆகியவை பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று தொட்டபெட்டா தேயிலை பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவிலும் அலங்கார செடிகள் பனியில் கருகாமல் இருக்க, கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவைகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகளும் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குளிரும் அதிகமாக காணப்படுகிறது. கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களிலேயே பனி மூட்டம் காணப்படும் நிலையில், வழக்கத்தை காட்டிலும் குளிர் அதிகமாகவே காணப்படுகிறது.

0 Comments

Write A Comment