Tamil Sanjikai

புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகசுந்தரி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோஷமாக புதுச்சேரியில் குடும்பம் நடத்திவந்தனர். சண்முகசுந்தரி தனது பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததால் அவரை கடந்த வாரம் திருநெல்வேலியில் விட்டுவிட்டு வந்தார் புருஷோத்தமன்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் மனைவியுடன் செல்போனில் பேசுவது புருஷோத்தமனின் வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு புருஷோத்தமன் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இரவு உணவுக்கு பரோட்டா வாங்கிவந்துள்ளார். வழக்கம்போல மனைவியுடன் பேசிக்கொண்டே சாப்பிட அமர்ந்திருக்கிறார்.

பரோட்டாவைப் பிய்த்து வாயில் வைத்ததும் புருஷோத்தமனுக்கு விக்கல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து விக்கல் எடுத்துக்கொண்டே இருந்ததால் தண்ணீர் குடியுங்கள் என்று மறுமுனையில் கூறினார் சண்முகசுந்தரி. ஆனால், அதன்பிறகு கணவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் நிசப்தம் நிலவியதால் பதறிப்போன சண்முகசுந்தரி, செல்போன் தொடர்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் கணவருக்குப் போன் செய்தார். ஆனால், போனை புருஷோத்தமன் எடுக்கவில்லை.;இதனால் அதிர்ச்சியடைந்தசண்முகசுந்தரி உடனடியாக அருகில் உள்ள உறவினருக்கு போன் செய்து உடனே தங்கள் வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார் சண்முகசுந்தரி.

நிலைமையை உணர்ந்த அவர் உடனே புருஷோத்தமனின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். ஆனால், உள்புறம் தாழிடப்பட்ட கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறார்;அப்போது புருஷோத்தமன் சாப்பாட்டுத் தட்டுக்கு அருகில் தரையில் படுத்திருந்தது தெரிந்தது. உடனே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பரோட்டா சாப்பிட்ட நிலையிலேயே மயங்கிக் கிடந்தார். அதிர்ந்து போன உறவினர், உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பரோட்டா தொண்டையில் அடைத்துக்கொண்டதால்தான் புருஷோத்தமன் உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கும் காவல்துறையினர், வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். திருமணமான 6 மாதத்திலேயே புருஷோத்தமன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment