Tamil Sanjikai

கோவை மாவட்டம், சூலூரில் ஏற்கனவே இரண்டு திருமண செய்து மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் தினேஷ் ( 26). இவர் ராசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பேட்டன் மேக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அரவிந்த் திருமணமான 15 நாட்களிலேயே தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். அவரது உடலில் கைகளால் கீரியும், வயிற்றில் உதைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதையடுத்து பிரியதர்சினி தனது மாமனார், மாமியாரிடம் இதுபற்றி சொன்னபோது அப்படித்தான் அடிப்பான் என கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பிரியதர்சினி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூலூர் போலீசார் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கும் புகார் அளித்த பிரியதர்சினி தற்போது திருப்பூரில் உள்ள தனது அப்பா வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அரவிந்த் கல்யாண வலைதளத்தில் மீண்டும் மணமகள் தேடி கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த ஐய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா ( 23) என்பவரை இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அனுப்பிரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை ஓன்று உள்ளது. அதை தெரிந்துதான் அரவிந்த் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் மனைவி இருப்பதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரவிந்த் இரண்டாவது மனைவி அனுப்ரியாவையும், முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போன்றே இவரையும் கொடுமைப்படுத்தியதாகவும் தனது குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது மனைவி அனுப்பிரியாவும் இவர்களது தொல்லை தாங்க முடியாமல் தனது தாயார் வீட்டிற்கு சென்று இருந்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் மீண்டும் கல்யாண வலைத்தளத்தில் மூன்றாவதாக மணமகள் தேடி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினி குடும்பத்தினரும், இரண்டாவது மனைவி அனுப்பிரியா குடும்பத்தினரும் விசாரிக்கையில், அப்படித்தான் செய்வேன் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அரவிந்தன் கூறியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, நேற்று காலை முதல் மனைவி பிரியதர்ஷினி மற்றும் இரண்டாவது மனைவி அனுப்பிரியாவும் சூலூர் வந்து அரவிந்தனின் தந்தை சௌந்தர்ராஜை அழைத்துக் கொண்டு, அரவிந்தன் பணியாற்றி வரும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்பும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த கம்பெனி நிர்வாகம் அவரை வெளியே அனுப்ப மறுத்ததால் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் வந்ததின் பேரில் போலீசார் சென்று அரவிந்தனையும், அவரது இரண்டு மனைவிகளையும் சூலூர் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி விட்டு வந்துள்ளனர். அப்போது கம்பெனியில் இருந்து வெளியே வந்த அரவிந்தனை அவரது முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் மூவரையும் சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் அனுப்பிரியா ஆகியோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.<>

இரண்டு மனைவிகளை மறைத்து மூன்றாவதாக திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment